Wednesday, 11 October 2017

முதியவரிடம் இளமையான ஓர் சந்திப்பு- பேருந்தில்

நேற்று, சனிக்கிழமை, பேருந்தில் இலால்குடி-திருச்சிக்கு பயணப்படும் போது, சமயபுரம் டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெரியவர் ஏறினார். என் அருகே உள்ள இருக்கையில் வந்து அவர் அமர்ந்தார். காவிரி பாலத்தில் பேருந்து கடக்கும் பொழுது, அப்பெரியவர் தன்னை அறியாது புலம்பினார், தண்ணீர் இன்றி முள்புதரான காவிரியை கண்டு. அருகில் என்னை கண்டவுடன், என்னிடம் சொன்னார், "சார் எனக்கு வயது 93 (TNEB Rtd), என் மனைவிக்கு 87, என் மகன்களில் ஒருவர் சிங்கப்பூரிலும், ஒருவர் டவுனிலும் உள்ளனர், என் மகளுக்கோ திருமணமாகி திருமண வயதில் ஒரு பெண் உள்ளார் " என்றெல்லாம் உரிமையுடன் மூன்றாம் மனிதரான என்னிடம் கூறினார். ஜெ மறைவுக்கு பின்னர் நடந்த அரசியல் நகர்வுகளைப் பற்றியும், கருணாநிதி நிலைப்பற்றியும், மோடியின் நகர்வுகளைப்பற்றியும் விவாதித்தோம். அப்பெரியவர் தன் அனுபவங்களில் பல அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களை கண்டுள்ளதாகவும் அவர்களை பாராட்டியும் விமர்சித்தும் பல கருத்துக்களை முன்வைத்தார். அப்படி பேசிக்கொண்டு இருக்கையில் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் ஆளுமை திறனை உச்சாணி கொம்பில் வைத்து புகழ்ந்தார். கலைஞரின் தமிழ் பற்றியும் பேச அவர் மறக்கவில்லை. 1947ல் EBல் வேலைக்கு சேர்ந்து ரூ.6.00 மாதச்சம்பலமாக பெற்றதையும் கூறிய அவர். பிறந்த நாள் முதலே திருச்சியில் வாழ்வதால் இவ்வூரின் வளர்ச்சியை கடந்த 90 வருடமாக கண்டுள்ளதையும், இன்றும் காண்பதையும் அவர் கூறினார். திருச்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு காங்கிரஸ் காரர்கள் என்றார் அவர். ஓர் ஆச்சர்ய குறியீடாக என் முகம் மாறியதை கண்ட அவர், சிறித்துக் கொண்டே சொன்னார், "சார் 1950 களில் இருந்த காங்கிரஸை சொன்னேன், இன்றையது அல்ல" என்று. துப்பாக்கி தொழிற்சாலை, பெல் நிறுவனங்கள் திருச்சியில் வர காரணமாக இருந்தவர்கள் இராஜாஜி, காமராசர் மற்றும் பக்தவட்சலம் போன்றோர் என்றார் அவர். 93வது இளைஞரிடம் இறங்கும் முன் கேட்டேன், "டவுனுக்கு ஏன், ஏதும் முக்கியமான வேலையோ" என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னார், "காபி தூள் வாங்க வந்தேன் என்று"... நன்றி, மு.விக்னேஷ்

No comments:

Post a Comment